பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
சென்னை: தவெக தலைவர் விஜய், நேற்று திமுக மற்றும் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசிய நிலையில் தற்போது அதிமுக, முதல் முறையாக விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து தனது தவெக எதிர்ப்புப் பீரங்கியை அவரது கட்சியை நோக்கி திருப்பியுள்ளது.
நேற்று மாமல்லபுரத்தில் தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். பாஜகவை அவர் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை மட்டுமே விமர்சித்தார்.
பாஜகவிடம் நேரடியாக சரணடைந்து விட்டது அதிமுக, அடிமையாக உள்ளது, அண்ணா பெயரில் உள்ள கட்சி ஊழல் கட்சி என்றெல்லாம அவர் சாடியிருந்தார். இந்த நிலையில் விஜய்யை பனையூர் பண்ணையார் என்று அழைத்து அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
விஜய்யை நேரடியாக அதிமுக விமர்சித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இனி விஜய்க்கு எதிராக அதிமுக கடுமையாக இறங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யை விமர்சித்து அதிமுக வெளியிட்ட அறிக்கை:
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
மத்திய அரசிற்கு அடிமை என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகிறீர்களா..?
ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணா திமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீங்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களே ?
அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…!
இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!
அறிவாலய குப்பையோடு, பனையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக என்று கடுமையாக சாடியுள்ளது அதிமுக.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த கட்சி அதிமுகதான். திமுக கூட்டணிக் கட்சிகள், கடுமையாக விஜய்யை சாடிக் கொண்டிருந்தபோது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் முதலில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவரது கூட்டங்களிலும் கூட தவெகவுக்கு ஆதரவாகவே பேசினார். தவெகவினரும் கூட எடப்பாடியார் கூட்டத்துக்கு தவெக கொடியுடன் வந்தனர். எடப்பாடி பழனிச்சாமியும் கூட கொடி பறக்க ஆரம்பிச்சிருச்சு என்று பேசி வந்தார். தவெக அதிமுக கூட்டணி அமையும் என்றும் கூட பேச்சுக்கள் கிளம்பின.
ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. பாஜக பக்கமிருந்தும் கூட விஜய்க்கு ஓரளவுக்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன. ஆனால் அந்தப் பக்கமும் விஜய் திரும்பவில்லை. இந்த நிலையில் அதிமுக கடுமையாக விமர்சித்திருப்பதைப் பார்த்தால், விஜய் மீதான எதிர்ப்பை அதிமுக அதிகரிக்கப் போவதையே உணர்த்துகிறது.
விஜய்யின் டெல்லி பயணத்திற்குப் பின்னர்தான் இந்த கடுமையான போக்குகள் வெளி வந்திருப்பதால், டெல்லி பயணத்தில் என்ன நடந்தது என்ற பேச்சுக்களும் தற்போது கிளம்பியுள்ளன. நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தவெக வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்து விடப்பட்டு, தனியேதான் போட்டியிடப் போகிறது என்பது தெளிவாகியுள்ளது.