கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

Su.tha Arivalagan
Jan 23, 2026,06:11 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. யார் யாருடன் கூட்டணி, எந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை தாண்டி, தற்போது யாருக்கு எந்த சின்னம் என்ற நிலைக்கு தேர்தல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது. 


விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு 234 தொகுதிகளிலும், 234 சின்னங்களை ஒதுக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக ஒரு பகீர் தகவல் பரவி வந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தவெக கட்சிக்கே விசில் சின்னத்தை ஒதுக்கியதாக தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது. 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டும் தான் அவர்களுக்கு மட்டும் விசில் சின்னம் கிடைக்கும். ஒருவேளை சில தொகுதிகளில் தவெக போட்டியிடவில்லை என்றால் அவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் வேறு யாராவது அல்லது சுயேட்சைகள் விசில் சின்னத்தை கேட்டால் அதை அவர்களுக்கு ஒதுக்கி விடுவார்கள். இதனால் தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு, தவெக.,வின் ஆதரவு ஓட்டுக்களை பெற போட்டா போட்டி நடக்கும்.




அதே போல் இதுவரை தேர்தலில் போட்டியிடுகிறார்களா இல்லையா என்றே தெரியாமல் இருந்த கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தையும் கொடுத்து விட்டார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என ஜி.கே.வாசன் ஒரு புறம் அறிவித்து விட்டார். இப்படி சிறிய கட்சிகள் கூட தங்களுக்கான தேர்தல் சின்னத்தை உறுதி செய்து விட்டன. ஆனால் முக்கிய கட்சிகளில் ஒன்றாக சொல்லப்படும் பாமக.,வில் மாம்பழ சின்னம் யாருக்கு என்ற பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.


இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பிரதான எதிர்கட்சியாகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா என்ற குழப்பமான நிலையே இப்போது வரை உள்ளது. அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இணைய போகிறார்கள்? யாருக்கு எத்தனை தொகுதிகள்? அதிமுக மட்டும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறது என்பதை தாண்டி அதிமுக இரட்டை இலை சின்னம் விவகாரம் தேர்தலுக்கு முன் முடிவுக்கு வரும் என்பது முக்கிய பேச்சாக போய் கொண்டிருக்கிறது.


காரணம், டில்லி ஐகோர்ட்டில் புகழேந்தி தொடர்ந்த இரட்டை இலை தொடர்பான வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரைணயின் போது, அதிமுக சின்னம் ஒதுக்கீடு, கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை நடவடிக்கை தான் எடுப்பதாக சொல்லி உள்ளார்கள். இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. 


தேர்தல் சமயத்தில் இரட்டை இலை சின்னம் விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படியும் அதிமுக, இரட்டை இலை சின்னத்தை பெற்று விடும் என்றாலும், அது சிக்கல் இல்லாமல் கிடைக்குமா என்பது தான் தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. அந்த சமயத்தில் இரட்டை சின்னம் கிடைப்பதில் சிக்கல் வந்தால் அது அதிமுக.,விற்கு மிகப் பெரிய சவாலாக அமையும்.