கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், அதிமுக உறுப்பினர்கள் அளித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கோரி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்ட முக்கிய கவன ஈர்ப்புத் தீர்மானத்தை இன்றே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். அதிமுக உறுப்பினர்கள் அளித்து 5 நாட்கள் ஆகியும், இதுவரை அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
சபாநாயகர் விளக்கம் :
அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுகவினர் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான விவாதம் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
வெளிநடப்பு செய்த அதிமுக :
இருப்பினும், சபாநாயகரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்றே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலன் சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை 5 நாட்களாகியும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் அரசு தாமதப்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார்.