பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

Su.tha Arivalagan
Oct 18, 2025,05:12 PM IST

காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் அடுத்த மாதம் நடைபெறவிருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகியுள்ளது. 


ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.


இந்த வீரர்கள் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குனில் இருந்து ஷரனாவுக்கு ஒரு நட்புப் போட்டியில் பங்கேற்கச் சென்றனர். போட்டி முடிந்து வீடு திரும்பியபோது, அவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். இது "பாகிஸ்தான் ஆட்சியால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்" என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. கொல்லப்பட்ட வீரர்களின் பெயர்கள் கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹரூன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.




இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்துள் அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் விளையாட்டு சமூகம், அதன் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்திற்கு ஒரு பெரிய இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஒற்றுமையையும் தெரிவிக்கிறோம். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முத்தரப்பு தொடரில் இருந்து விலகுகிறோம் என்று தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான் சமூக வலைத்தளங்களில் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். "ஆப்கானிஸ்தான் மீது நடத்தப்பட்ட பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களில் அப்பாவி உயிர்கள் பலியானதில் நான் மிகவும் வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகள் மற்றும் உலக அரங்கில் தங்கள் நாட்டிற்காக விளையாட கனவு கண்ட இளம் கிரிக்கெட் வீரர்களை பலி கொண்ட ஒரு துயரம் இது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.