அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
சென்னை : தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்தடுத்து எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வரும் ஜூலை 2ஆம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சியில் இணைய உள்ளதாகத் தீவிரமாகப் பேசப்பட்டு வந்தது.
கட்சித் தலைமை மீது நிலவி வரும் அதிருப்தி அல்லது தனது அரசியல் எதிர்காலம் குறித்த புதிய திட்டமே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து விட்டார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதைப் பரிசீலித்த சபாநாயகர் கடிதத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 6 பேர் ராஜினாமா :
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும், அடுத்தடுத்த மாற்றங்களும் தொடர்ந்து வரும் வேளையில், இந்தச் செய்தி அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுக.,வை சேர்ந்த மரகதம் குமாரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்து விட்டனர். அவர்களைத் தொடர்ந்து சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவரும் தவெகவில் இணையப் போகிறார்.
தற்போது திருச்சி கிழக்கையும் சேர்த்து மொத்தமாக 7 சட்டசபைத் தொகுதிகள் காலியாகியுள்ளன. ரவுண்டாக 10 வரும் வரை ராஜினாமாக்கள் தொடருமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
முன்னணி முகங்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து விலகுவது, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு
கரூர் மாவட்டத்தில் வலுவான அடித்தளம் கொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்தத் திடீர் மூவ், தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக கொங்கு மண்டல அதிமுக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தவெக கட்சி தங்களது கட்டமைப்பை வலுப்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளதையே இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.