கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை விடப்பட்டிருந்தது. கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு விடுமுறை தேதி அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியதினால் வெப்பம் குறைந்து காணப்படுகிறது. இதனால், திட்டமிட்டு முன்னர் அறிவிக்கப்பட்ட ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்,
2025-26ம் புதிய கல்வி ஆண்டில் 2.6.25 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.