கத்திரி வெயிலுக்கு இன்றுடன் என்டுகார்டு.. வெயில் படிப்படியாக குறையும்..!

Manjula Devi
May 28, 2025,01:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மே4ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில், இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தமிழகத்தில் வெயில்  படிப்படியாக குறையும் என அறிவித்துள்ளது.



பொதுவாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சமாக இருக்கும்.  ஒவ்வொரு ஆண்டும் மே நான்காம் தேதி தொடங்கும் கத்திரி வெயில் மொத்தம் 25 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், என அனைவரும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பொதுவான நெறிமுறை ஆகும். அந்த வகையில் நடப்பாண்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே நான்காம் தேதி தொடங்கியது. 




அப்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே அக்னி நட்சத்திரம் தொடக்கத்தில் வெயில் உச்சமாக இருந்தது .பல்வேறு இடங்களில் வெயில் சதத்தை தாண்டி பதிவானது. குறிப்பாக வேலூர், திருச்சி, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தியது. இதனை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தொடர்ந்து அக்னி நட்சத்திரம் தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பொழிய ஆரம்பித்தது. இதனால் ஒரு சில இடங்களில் மட்டும் வெயில் அதிகரித்தும், ஒரு சில இடங்களில்  வெயில் சற்று தணிந்தும் காணப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து வங்க கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்தது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழையும் வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் மழைப்பொழிவு அதிகளவு கிடைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.


இதனால் தென்மேற்கு பருவமழை கால கட்டத்தில் நாட்டில் 80 சதவிகிதம் மழைப்பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது. அதே சமயத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூலை முதல் வாரத்தில் பரவக்கூடும் என்பதால் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. இனி வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழையால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.