அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடைபட்டதே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக கருதப்படும் இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உட்பட, மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தியுள்ளது. அதன் இறுதியில், 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை தாக்கலாகியுள்ளது. அதில் உள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விமானம் டேக் ஆஃப் ஆகி அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை அடைந்த அடுத்த சில வினாடிகளில், இரு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் 'ரன்' நிலையில் இருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியுள்ளன. இதனால் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்டு, அவற்றின் உந்துவிசை உடனடியாகக் குறைந்தது.
விமானத்தின் காக்பிட் குரல் பதிவில் (Cockpit Voice Recorder - CVR), ஒரு விமானி மற்றொரு விமானியிடம் "ஏன் எரிபொருளைத் துண்டித்தீர்கள்?" என்று கேட்பதும், அதற்கு மற்றொரு விமானி "நான் செய்யவில்லை" என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த உரையாடல், விமானிகள் கூட எதிர்பாராத விதமாக இந்த எரிபொருள் துண்டிப்பு நிகழ்ந்திருப்பதையேக் காட்டுகிறது.
எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், என்ஜின்களின் சுழற்சி வேகம் படிப்படியாகக் குறைந்துள்ளது. விமானம் புறப்பட்டு சில வினாடிகளிலேயே 'மே டே, மே டே, மே டே' என அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில வினாடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியுள்ளது.
எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் தானாகவோ அல்லது தவறுதலாகவோ 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், விமானத்தில் குறிப்பிடத்தக்க எந்த தொழில்நுட்பக் கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்றும், என்ஜின்களிலோ அல்லது எரிபொருள் அமைப்பிலோ பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை. விமானத்தின் மீது எந்தப் பறவையும் மோதியதற்கான அறிகுறிகளும் இல்லை. வானிலையும் தெளிவாக இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட தகவல்கள், இந்தியாவில் முதல் முறையாக பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வு விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து இறுதி அறிக்கை இன்னும் 2 வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ஏன் இவ்வாறு செயல்பட்டன என்பது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாக AAIB தெரிவித்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான முதற்கட்ட அறிக்கை, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள விமானத்தைத் தயாரித்த நிறுவனமான போயிங் கூறுகையில், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.