எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!

Su.tha Arivalagan
Aug 27, 2025,10:45 AM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தி எனப்படும் பிள்ளையார் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி இன்று வழக்கமான உற்சாகத்துடன் பயபக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் குறிப்பாக விநாயகர் ஆலயங்களில் விழாக் கோலம் போட்டு காணப்படுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் என அனைத்து விநாயகர் ஆலயங்களிலும் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. விநாயகருக்கு விதவிதமான படையல்கள் இட்டு பக்தர்கள் அவரது அருளை பெற்று வருகின்றனர் மக்கள்.


பல்வேறு ஊர்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்தும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. வழிபாடுகளுக்குப் பிறகு இந்த சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.




மறுபக்கம் சமூக வலைதளங்களில் விநாயகர் கலக்கிக் கொண்டிருக்கிறார். விதவிதமான உருவங்களில் விநாயகரை உருவாக்கி வாழ்த்துக்களை மக்கள் பரிமாறிக் கொண்டு வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்றும் விநாயகர் சிலைகள் விதவிதமாக வருவது சமீப ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வந்தது. அதாவது துப்பாக்கி விநாயகர், ராக்கெட் விநாயகர், மிலிட்டரி விநாயகர் என்று விதவிதமான விநாயகரை நாம் பார்த்துள்ளோம்.


கொரோனா காலத்துக்குப் பிறகு வந்த விநாயகர் சதுர்த்தியின்போது, மாஸ்க் விநாயகர், டாக்டர் விநாயகர் என்று வித விதமான விநாயகர் சிலைகளை நாம் பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு காலம் என்பதால் அதற்கேற்றபடி ட்ரெண்ட் மாறி உள்ளது.




எங்கு பார்த்தாலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் விதவிதமான விநாயகர் படங்களை, வீடியோக்களை உருவாக்கி கலக்கி வருகிறார்கள் நம்முடைய மக்கள். விநாயகர் சிலை உருவாக்குவது, விநாயகரை எலிகள் சேர்ந்து வழிபடுவது, விநாயகர் நடனம் ஆடுவது, விநாயகருடன் சேர்ந்து எலிகள் கூட்டமாக நடனம் ஆடுவது என்று விதவிதமாக கற்பனைக்கும் எட்டாத வகையில் விநாயகரை வைத்து விளையாடி வருகிறார்கள் பக்த கோடிகள்.


இது பார்க்கவும் சுவாரசியமாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் இன்று என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது. அந்த வழியில், அந்த வகையில் இன்று விநாயகரும் அந்த தொழில்நுட்பத்திற்குள் சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.