அதிமுக கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய கே.சி.வீரமணி: மீண்டும் பரபரப்பு

Su.tha Arivalagan
Jul 27, 2026,10:12 AM IST

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மேடையை விட்டு திடீரென வெளிநடப்பு செய்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


கூட்டத்தில் நடந்தது என்ன?

வாணியம்பாடியில் அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினார். கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திடீரென அங்கு சலசலப்பு ஏற்பட்டது.


தனது உரையின் போது மிகுந்த ஆவேசத்துடன் பேசிய கே.சி.வீரமணி, கட்சி நிர்வாகி ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "சமூக வலைதளங்களில் என்னை 'திருடன்' என்று சித்தரித்து, அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகி உடனடியாக பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கூட்டத்தில் வலியுறுத்தினார்.


வெளிநடப்பால் பரப்பரப்பு : 




தன்னை பற்றி அவதூறு பரப்பிய நபர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவதூறு பரப்பிய நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வரை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் கூறி, ஆவேசத்துடன் மேடையில் இருந்து இறங்கி கூட்டத்தை விட்டு வெளியேறினார். முன்னாள் அமைச்சர் திடீரென கோபத்துடன் வெளிநடப்பு செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கூட்டத்திலிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரைச் சூழ்ந்து கொண்டு சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், யாரின் சமாதானத்தையும் ஏற்க மறுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சி : 

கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, சொந்தக் கட்சியின் உள்ளூர் நிர்வாகி மீதே வெளிப்படையாகக் குற்றம்சாட்டி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் அளவில் அதிமுக நிர்வாகிகளிடையே நிலவி வரும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் அவதூறு விவகாரம் குறித்து தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.


அதிமுக.,வில் பல மட்டங்களிலும் இது போன்ற அதிருப்திகளும், கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து நிலவி வருவது அக்கட்சி தொண்டர்களை கவலை அடைய வைத்துள்ளது.