அகமதாபாத் விமான விபத்து... ஏர் இந்தியா கருப்புப் பெட்டி கடும் சேதம்!
அகமதாபாத்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி கடும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், அமெரிக்காவிற்கு அனுப்பி தரகவுளை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த 241 பேர் பலியாயினர். அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் இருந்தது. இதனால் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் 210 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்கள் தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் இருந்த கருப்புபெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கருப்பு பெட்டியின் மூலமாக தான் விபத்திற்கான முக்கிய காரணம் தெரிய வரும்.
இதனால், விபத்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட கருப்புபெட்டியின் வெளிப்புறத்தில் கடும் சேதம் அடைந்துள்ளதால், விமான விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாஷிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் ஆய்வகத்திற்கு பெரும் சேதம் அடைந்துள்ள கருப்புப் பெட்டி அனுப்பப்பட்டு தரவுகளை மீட்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன