அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
அகமதாபாத் : அகமதாபாத்தில் 200 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் மேகனின்நகரில் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானது. லண்டன் கேட்விக்கிற்குப் புறப்பட்டுச் சென்ற இந்த விமானத்தில் 240க்கும் மேற்பட்ட பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதாகவும், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகள் அங்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்-லண்டன் கேட்விக் இடையே இயக்கப்பட்ட விமானம் AI171 விபத்தில் சிக்கியது. நாங்கள் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். கூடிய விரைவில் எங்கள் எக்ஸ் பக்கத்தில் (X handle) மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்" என்று தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் மற்றும் குஜராத் காவல்துறை தலைவரிடம் பேசியுள்ளார். மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது. சம்பவ இடத்தில் 12 தீயணைப்பு வண்டிகள் உள்ளன.
முன்னாள் பஞ்சாப் முதல்வர் மற்றும் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "அகமதாபாத் விமான விபத்தால் அதிர்ச்சியடைந்தேன். அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
விமான விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதி அருகில் விமான விபத்து நடைபெற்றுள்ளது. பத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.