இரைதேடும் பறவைகள்!
- கவிமாமணி ஏரூர் அலாவுதீன்
வயிற்றுப் பசியோ
பகலெல்லாம் வாட்டிட,
பட்டினியைப் பார்த்து
இரவுகளில் கண்கலங்கிட...
இருந்தும் பயனில்லை என்றே
பறந்திட எண்ணி,
பயணப் பொதியுடன்
பறந்தாள் அரபு தேசம்...
காண்பது புதுமை,
கேட்பது அறியாமை,
அகதியானவள் ஆறுதலுக்கும்
அருகிலே யாரும் இல்லை...
வேலைக்குப் பஞ்சம் இல்லை,
வேளைக்கு உண்பதும் இல்லை,
தூக்கத்தையும் துயரத்தையும்
தொலைத்த காசு...
கையிலே இருப்பதும் இல்லை,
கடன் தீர்வதும் இல்லை,
மெழுகுவர்த்தி போலவே
வெளிநாட்டுப் பயணம்...
அரபியின் ஆடைகளோ
பார்ப்பதற்கு வெண்மை,
சிலரது மனங்களோ
அழுக்கில் கிடக்கும்...
நாள்களும் மாறுபடும்,
வேலைகளோ மாறாது,
ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் துன்பங்கள்...
விட்டில் பறவைபோல
தூரத்தில் பார்க்கையிலே
அழகோ அழகுதான்,
அருகிலே வந்து பார்...
அவரவர் துன்பங்கள்
ஆடைகள் நனைந்திடும்,
அவ்வளவு கண்ணீர்க்
கதைகள் ஒளிந்து கிடக்கும்...
ஊரே பேதலிக்கும்,
முடிந்தவரை வசைபாடும்.