சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு..ஊட்டி சுற்றுலா தலங்கள் முழுவதும் இன்று மூடல்..!
ஊட்டி: நீலகிரி, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும் என அறிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, கடந்த மூன்று நாட்களாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. உதகையில் பெய்த மழையால் கல்லட்டி மலைப்பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்து சாலைகள் சேதமடைந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி மூடப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதன்படி உதகையிலிருந்து மசினகுடி செல்லும் அனைத்து வாகனங்களும் கூடலூர் வழியாக அனுப்பப்பட்டன.
கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழையால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே சமயத்தில் அப்பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரக்கிளைகளை வெட்டும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி, கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும் திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று மூடப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, பைக்காரா, பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா காட்சி முனை, அருவிகள், ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.