நாணல் போல் வளைந்து நின்றாள்.. வானவில்!
Aug 14, 2026,05:19 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
வண்ணங்களோடு
என் எண்ணங்களில்
வானவில்
தொடு வானம் எங்கெங்கும் அழகழகாய்
நீல வண்ண கம்பளம்
நிறைந்திருக்க
வான வெளியில் வீதி
எங்கும்
கருமை நிற மேகக் கூட்டங்களின்
பரவசமான அணிவகுப்பு சுயம் வரத்திற்காக
இன்னிசையாய்
இனிமையான
இசைதந்த
இடிச்சத்தம்
வானவீதி எங்கும்
அதிர்ந்து முழங்க
எங்கு பார்த்தாலும்
வண்ண விளக்காய்
நொடிக்கு ஒரு முறை
அவள்
மின்னி மறைந்தாள்
மின்னல் பெண்
பௌர்ணமியாய்
வலம் வந்த அவள்
நிலவுமகள் வானில்
அழகை கூட்ட
நட்சத்திர தோழிகள் வழி நெடுகிலும்
கிண்டலாய் பார்த்து
கண் சிமிட்ட
இதமாய் வருடிச் செல்லும் மழைக்காற்றின்
அச்சாரமாய் தூறும்
மழையின் சாரள்
இவர்களின் ஒருமித்த
சங்கமத்தில் வானில்
ஏழு வண்ணங்களில்
பட்டாடை உடுத்தி
ஒய்யாரமாய் அழகின் அழகாய் அழகுச்சிலையாய்
நாணல் போல் வளைந்து நின்றாள்
மணப் பெண் சுயம்வரத்திற்காக!