துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழரை தேர்வு செய்தது ஏன்? அமித்ஷா விளக்கம்

Su.tha Arivalagan
Aug 25, 2025,05:49 PM IST

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிர கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்ததற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார். 


தேர்தலுக்கு முன்னதாக தமிழக வாக்காளர்களை கவருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ANI க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அமித்ஷா இதுகுறித்துக் கூறியதாவது: 


சி.பி.ராதாகிருஷ்ணனின் நீண்ட அரசியல் வாழ்க்கை மற்றும் நேர்மையையைப் பார்க்க வேண்டும். ஜனாதிபதி கிழக்கு இந்தியாவையும், பிரதமர் மேற்கு மற்றும் வட இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானது.




நாங்கள் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் தேர்தல்களை சந்தித்துள்ளோம். சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். யாரை நிறுத்தினாலும் இது போன்ற கேள்விகள் எழும். ராதாகிருஷ்ணனுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. அவர் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழகத்தில் எங்கள் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். ஜார்கண்ட், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் கவர்னராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு தூய்மையான பொது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். மேலும் அவர் ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி.


நாங்கள் இதற்கு முன்பும் தமிழகத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறோம். சில இடங்களில் வெற்றி கூட பெற்று இருக்கிறோம். அதனால் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், இது போன்ற கேள்விகள் வந்துகொண்டுதான் இருக்கும். சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு சாதாரண தொண்டனாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, இன்று துணை ஜனாதிபதி வேட்பாளராக உயர்ந்துள்ளார். இது சாதாரணமான விஷயம் அல்ல. அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு இது.


அவர் ஜார்கண்ட் மாநிலத்தின் கவர்னராக இருந்தபோது, அம்மாநிலத்தில் பல வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்தார். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தினார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கூடுதல் பொறுப்பை கவனித்தபோதும், அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்.


சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு சிறந்த நிர்வாகி மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. அவரது பேச்சு மக்களை கவரும் வகையில் இருக்கும். அவர் எப்போதுமே தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் குரல் கொடுப்பார் என்றார் அமித்ஷா.