கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்: கேரளாவில் அரிதான மற்றும் அபாயகரமான மூளைத் தொற்றான "அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்" (Amoebic Meningoencephalitis) நோயின் பரவல் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
இதுவரை 69 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமீபா கிருமியானது அசுத்தமான நீர் மூலமாக மூக்கின் வழியே மூளைக்குள் நுழைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் போன்ற வடக்கு மாவட்டங்களில் பரவிய இந்த நோய், தற்போது திருவனந்தபுரத்தில் 17 வயது இளைஞருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தண்ணீர் பயன்பாட்டில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக முகம் கழுவுதல் அல்லது குளிக்கும்போது சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார். இந்த நோய்ப் பரவல் மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு சீரழிந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், உலகத்தில் உள்ள அனைத்து நோய்களும் கேரளாவில் உள்ளன. ஆனால், சுகாதாரத் துறை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறது. மாநில சுகாதாரத் துறை வென்டிலேட்டரில் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
கொரோனா சமயத்திலும் கூட கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள சீதோஷ்ண நிலையும் வைரஸ் உள்ளிட்ட பாதிப்புகள் அதி வேகமாக பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.