மெய்நட்பு!
- ஆனந்தி சத்தியராஜ்
இந்த ஓவியம் ஒரு சாதாரண வண்ணத் தோகையாகத் தென்படலாம்...
ஆனால், இதைச் சற்று உற்றுப்பார்த்து நட்போடு ஒப்பிட முயன்ற போதுதான் இதன் ஆழம் புரிகிறது!
வண்ணமயமான இத்தோகையின் சுழல்கள் நாம் கடந்துபோகும் மனிதர்களின் கூட்டமென்றால், நடுநாயகமாய் மிளிரும் இக்கண்தான் மெய் நட்பின் மையம்! ஆம்... மனிதத் தொகை சூழ்ந்த இந்தக் கூட்டத்தில், நாம் அன்றாடம் வழியில் காண்போரெல்லாம் அறிமுகப் புள்ளிகளே!
நிமிடத்திற்குச் சில கணம் கண்விழியில் நினைவாக வந்து செல்வோர் எல்லாம் நம் மனதின் தற்காலிகப் பிரியர்களே!
ஆயிரம் பேரிடம் நாம் பேசினாலும் பழகினாலும்,
மெய்நட்பு தரும் உணர்வு தனித்துவமானது!
வருடங்கள், மாதங்கள் என எத்தனை ஓடினாலும்,
"ஏன் அழைக்கவில்லை?" என்ற வாதம் அங்கு இருக்காது!
இரண்டு நிமிடங்களுக்கு முன்னமே பேசியது போலவே
இயல்பாய்த் தொடரும் அந்த நட்பின் பேச்சு!
அகவை கூடி, தேகங்களின் சுருக்கங்கள் கண்முன் தெரிந்தாலும், தூய நட்பின் சந்திப்பில் இளமையின் துள்ளல் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும்!
போலி முகமூடி தேவையில்லை,
நாம் நாமாக வாழவும் தடையில்லை!
கோபம், கண்ணீர், வெறுப்பு, இயலாமை, சோர்வு, மகிழ்ச்சி என்று எல்லாவற்றையும்
மறைக்காமல் கொட்டிட எந்தத் தயக்கமும் இருக்காது!
நம்மையும், நம் உணர்வுகளையும் அப்படியே ஏற்பதுதான் அந்த புனித நட்பு!
அதற்கு ஆண்–பெண், சாதி–மதம், கருப்பு–சிவப்பு, உயர்வு–தாழ்வு, பதவி–பணம் என எந்தப் பேதமும் இல்லை. பயமும் இருக்காது, இரகசியமும் இருக்காது, வெளிப்படையான சிந்தனை பரிமாற்றம் மட்டுமே இருக்கும்!
நம் மனச் சுமைகளைப் பகிர்ந்தால் அது பாதியாகக் குறையும்!
மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் அது இரட்டிப்பாகப் பெருகும்!
மெய்நட்பில் முகத்திற்கு நேரே கேலிப் பேச்சுத்தான் அதிகம் இருக்கும்,
ஆனால் முதுகிற்குப் பின்னே நம்மை உயர்த்தி மட்டுமே பேச்சு இருக்கும்!
"எந்த சூழலிலும், எங்கும் எப்போதும் நான் இருப்பேன்" என்று ஊன்றுகோல் போல் நிலைத்திருக்கும்!
அது ஒருபோதும் தனக்கான தேவைகளுக்காக கடுகளவேனும் அடுத்தவரைத் துன்புறுத்தாது!
இந்தக் கலியுகத்தில் இப்படியும் நட்பு உள்ளதா என்று சிலருக்குத் திகைப்பு தோன்றலாம்!
ஆனால், அந்தப் பேரின்ப நட்பை வரமாய் பெற்ற பலர் இன்னும் அழகாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!
உண்மையான நட்பின் முதல் படியே 'தன்னை உணர்தல்' (Self-realisation) தான்!
நம்மை நாம் முதன்முதலில் முழுமையாகப் புரிந்துகொண்டு ஏற்கும் அந்தத் தெளிவே, உண்மையான நட்பின் முதல் விதை.
ஏனென்றால் முகமூடிகளைக் கழற்றிவிட்டுத் தன்னைத்தானே உணர்பவர்களால் மட்டுமே, மற்றொருவரின் உண்மையான அன்பையும் ஆழமாக உணர முடியும்! அந்த நட்பு எது சரி, எது தவறு என்று எப்போதுமே நல்வழி காட்டும் அலைவரிசையாக மட்டுமே செயல்படும்!
அப்படிப்பட்ட நண்பர்கள் தான் இவ்வண்ணமயமான வாழ்க்கையில், தனித்துவமிக்க ஒளியாக மிளிர்வார்கள்!
ஆக, சுயசிந்தனையோடு மெய்நட்பை உணர்ந்து கொண்டாடுவோம்; ஒருவேளை நல்ல நட்பு கிடைக்காமல் போனால் அவரவர்களின் உள்ளுணர்வுகளே நட்பாகக் கொள்வோம், நமக்குள் நாமே நட்பு கொள்வோம்!
நம் பாதையில் நம்மோடு நடக்கும் ஒவ்வொரு உயிரையும் அன்பின் வழியில் ஏற்று, மனிதநேயத்தோடு கரம்கோர்த்து இவ்வாழ்க்கையை இன்பமாய் வாழ்ந்து மகிழ்வோம்!