கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
இன்று பூ ஏன் சிரித்தது?என்ற செயல்பாடு செய்வதற்கு மெல்ல மலரும் மொட்டு மாணவர்களை அழைத்தேன். அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப் போகிறேன் என்றதும், ஆர்வத்துடன் செயல்பாட்டில் ஈடுபட்டனர். இருந்தாலும் அவர்களை சரளமாக படிக்க வைக்க முடியவில்லையே என்று வழக்கம் போல் புலம்பினேன்.
பின்னர் மெல்ல மலரும் மொட்டுகளுக்கு வகுப்பு நிலை மாணவர்களைக் கற்றுக் கொடுக்குமாறு கூறினேன்.
போட்டி போட்டுக் கொண்டு கீழ் மட்டக் கரும்பலகையின் உதவியுடன் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள். தருண் கற்றுக் கொடுத்த விதம் என்னை அசர வைத்தது
பயப்படாத, தைரியமா படி, இதக் கொஞ்சம் அழுத்திச் சொல்லு, மிஸ் கிட்ட படித்துக் காட்டும் பொழுது பயப்படாம படி ... நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்.மிஸ் உன்ன என்ன பண்ணிட போறாங்க... இப்படியெல்லாம் பேசிக் கொண்டே கற்றுக் கொடுத்தான்.
அந்த மாணவனும் அழகாகக் கற்றுக் கொண்டான்.
தருணைப் போலவே மற்ற மாணவர்களும் தமிழ் எழுத்துகள் மற்றும் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்து மெல்ல மலரும் மொட்டுக்களை வாசிக்க வைத்து விட்டனர்.
அவர்களே அம்மொட்டுகளுக்கு கிரீடம் அணிவித்து மகிழ்ந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).