வயதான தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது... போராட்டம் கைவிடப்படுகிறது... அண்ணாமலை அறிவிப்பு!

Meenakshi
May 19, 2025,07:11 PM IST

சென்னை: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தனியாக வசித்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நாளை நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  


குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் 

தமிழக பாஜக சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.




கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில்  குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எ்று தெரிவித்துள்ளார்.