சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
சென்னை: சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், பாஜ கட்சி தமிழக மக்கள் இதயத்தில் இடம் பெற்று கொண்டு இருக்கிறது. கரூரில் நடந்த முப்பெரும் விழா திமுக அரசில் சாராயம் விற்ற பணத்தில் தான் நடத்தப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜியை உலக மகா உத்தமர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார். செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.
2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையில் காவிரிக் கரை நோக்கி முதலமைச்சர் செல்கிறார். முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் வைத்து கொண்டு, அதில் சம்பாதித்த பணத்தில் நடத்திய விழா மேடையில் ஏதோ சாதனை செய்தது போல் எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறுகிறார்.
இன்றைக்கு திமுகவுக்கு எடுபிடியாக தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். அந்த காங்கிரஸ் கட்சியின் பெயரை தமிழக எடுபிடி கட்சி என்று மாற்றிவிடலாம். திமுகவுக்கு எடுபிடி வேலை செய்வதற்கு ஒரு கட்சி. சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று கூறி இருப்பதை முதல்வர் ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும்.
விஜய்யின் சுற்றுப் பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோசம் தான். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமலும் விஜய் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.