அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது: அண்ணாமலை!

Meenakshi
May 10, 2025,12:50 PM IST

தூத்துக்குடி: இந்தியாவை பொருத்த அளவில் அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து இருக்கிறோம் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், இந்தியா பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை இன்று நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளை நாம் பொருத்து, அதற்கு கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் தீவிரவாத மையத்தை தான் தாக்குகிறோம். 2008ல் மும்பை தாக்குதலின் போது 166 பேர் கொள்ளப்பட்டார்கள். அன்று நாம் அமைதி முறையில் ஐநா சபையில் வேண்டுகோள் விடுத்தோம்.




ஆனால், தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் மீது போர் தொடுக்கிறார்கள். நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவை பொருத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கிறோம். பாகிஸ்தான் தம் மீது தொடுக்கும் ட்ரோனுக்கும் பதிலடி கொடுத்து இருக்கின்றோம். நம் நாடு மிகப்பெரிய பொருளாதார நாடு. இந்தியாவில் பொருளாதாரம் 12 என்றால் பாகிஸ்தானில் ஒன்றில் தான் உள்ளது. பாகிஸ்தான் உடன் சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.


தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும். பாகிஸ்தானை பொறுத்த அளவு அந்நாடு அதன் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இனி இருக்காது. நாம் அவ்வளவு பலமாக இருக்கிறோம். நாம் நினைத்தால் பாகிஸ்தானை ஒன்றும் இல்லாமல் பண்ணி விடலாம். ஆனால், அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகிறோம்.பாகிஸ்தானை எதிர்ப்பது திமுக உட்பட அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்திய அரசுக்கு முழுமையாக தன்னுடைய ஒத்துழைப்பையும் திமுக அரசு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.