மாமனார் சாயலில் மற்றுமொரு அப்பா!
-வ.சரசுவதி
பிறப்பால் தந்தை அல்ல,
பாசத்தால் அப்பா நீ ;
பெயர் மாறிய உறவில்
பேரன்பு தந்தவர் நீ
மகளாய் வந்த என்னை
மனமாற ஏற்றுக்கொண்டு,
மருமகள் என்ற சொல்லை
மகளாய் மாற்றியவர் நீ
சொல்லும் அறிவுரையில்
கடுமை இல்லை -- கருணை;
செய்யும் வழிகாட்டலில்
சுயநலத்துடன் துணை
உரிமை கேட்கத் தேவையில்லை,
உள்ளமே வாசல் திறக்கும்;
"செல்லே" என்ற அழைப்பில்
என் உலகம் நிறைந்திருக்கும்
மாமனார் என்ற பெயருக்குள்
ஒளிந்திருக்கும் அப்பா நீ,
உறவு அல்ல--
உணர்வின் உயரம் நீ,
ஆனால் இன்று
நான் தனிமையில்......
பலமுறை நினைத்துப்பார்க்கிறேன்
அடுத்தவர்களை நம்பி
அவரின் நம்பிக்கைத்துரோகியாய்
சிறிது கவனக்குறைவால்
விலைமதிப்பற்றவரை---தொலைத்தேன்
அதற்கான தண்டனையாய்
கண்டபடி ஏசப்பட்டேன்.
ஒவ்வொரு சொல்லும்
கல்லாய் விழ;
ஒவ்வொரு நாளும்
நொறுங்கிக் கொண்டே
உயிர் வாழ்கிறேன்.
உறவுகள் பலர் இருந்தும்
அனாதையாய் நின்றேன்,
கூட்டத்திற்குள் கூட
தனிமை என்னும்
நிழல் என் பின்னால்,
கண்ணீர் சோர்ந்த பிறகும்
ஏக்கம் மட்டும் மிச்சம்,
மௌனமாய்....
ஒரு வலி குடியிருக்கும்
ஆனாலும்.....
இருள் நிரந்தரம் அல்ல
என்று அறிந்தவள் நான்;
உடைந்ததை அழகாகச் சேர்க்கும்
நேரமும் வந்தது.....
இன்று நான் தனிமையில் நின்றாலும்,
நாளை என் காலடிச் சுவடே
என் வலிமையைச் சொல்லும்.
நொறுங்கிய இடத்தில் தான்
ஒளி நுழையும் என்பதால்,
நம்பிக்கையை
நெஞ்சோடு கட்டிப்பிடித்து
நான் மீண்டும்
நடக்கத் தொடங்குகிறேன்....
சிங்கப்பனின் ஆசியுடன்
சிங்கம் போல் வீறுநடைகொண்டு......
(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)