தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட.. 4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த.. ஆளுநர் ஆர் என் ரவி!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்
2025 ஆம் ஆண்டுக்கான 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, தமிழ்நாடு நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக (திருத்த) சட்டமுன்வடிவு, தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள்(திருத்த) சட்டமுன்வடிவு, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப்பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டமுன்வடிவு, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டமுன்வடிவு, பதிவுச் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் திருத்தல், கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தல் உள்ளிட்ட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து நீண்டகாலமாக ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு காத்திருந்தது.
இந்த நிலையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு இன்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.