சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!

Su.tha Arivalagan
Aug 14, 2025,10:28 AM IST

மும்பை:  கிரிக்கெட் ரசிகர்களால் ஒரு காலத்தில் கடவுள் என்று போற்றப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.


கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு, சானியா சந்தோக் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இருப்பினும், அர்ஜுன் மற்றும் சானியா குடும்பத்தினர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


சானியா மும்பையைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் ரவி கை என்பவரின் பேத்தி ஆவார். இவர்களின் குடும்பம்  ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளது. InterContinental ஹோட்டல் மற்றும் Brooklyn Creamery போன்ற நிறுவனங்கள் இவர்களுடையதுதான். நிச்சயதார்த்தம் தனிப்பட்ட முறையில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மட்டுமே நடந்ததாக கூறப்படுகிறது.




சச்சின் டெண்டுல்கருக்கு 2 பிள்ளைகள். அர்ஜூன் தவிர அஞ்சலி என்ற மகளும் உள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார். 17 முதல் தர போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளையும், 532 ரன்களையும் எடுத்துள்ளார். 24 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், 119 ரன்களையும் எடுத்துள்ளார். 18 ஒரு நாள் போட்டிகளில் (List A) 25 விக்கெட்டுகளையும், 102 ரன்களையும் எடுத்துள்ளார்.


அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ரூ. 30 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. ஆனால், அந்த சீசனில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.