மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை இனிதே நடைபெற்றது. அழகர் மலை கோவிலில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்ட சுந்தரராஜப் பெருமாள், 'கள்ளழகர்' திருக்கோலத்தில் இன்று அதிகாலை மதுரை வைகை ஆற்றில் இறங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும் போது எந்த நிறத்தில் பட்டு உடுத்துகிறார் என்பது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு, விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சம் பெறவும் நல்ல அறிகுறியாகக் கருதப்படும் பச்சைப்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்.
கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினால், அந்த ஆண்டு மழை பெய்து விவசாயம் சிறந்து விளங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. முன்னதாக, இன்று அதிகாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் புறப்பட்டார். வழியெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். காலை சரியாக 05:45 முதல் 06:15 மணிக்குள் சித்ரா அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
ராமராயர் மண்டகப்படி அருகே அழகர் ஆற்றில் இறங்கியவுடன், பக்தர்கள் தங்கள் தோல் பைகளில் வைத்திருந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மதுரை மாநகரமே மக்கள் கடலில் மூழ்கியது போலக் காட்சியளித்தது.
திருவிழாவைக் காணப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வைகை ஆற்றின் இருபுறமும் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, டிரோன்கள் மூலம் கூட்டத்தைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று பகலில் ராமராயர் மண்டபத்தில் தங்கியிருந்து, பின் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெறும்.
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. இன்று மே 1 என்பதாலும் வழக்கத்தை விட அதிகமாகவே அக்கம் பக்கத்து மாவட்டத்துக்காரர்களும் சித்திரைத் திருவிழாவைக் காண வந்திருந்தனர்.