Asha Bhosle: ஓ பட்டர்பிளை.. நீ பாடிய பாடல்களுக்கு நன்றி.. மறக்க முடியாத செண்பகமே செண்பகமே!
Apr 12, 2026,02:36 PM IST
மும்பை: 92 வயதில் மறைந்துள்ள ஆஷா போஸ்லேவின் இழப்பு ஒவ்வொரு இசை ரசிகரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே, இந்திய இசையுலகின் ஒரு பெரும் ஆளுமை. அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் தமிழ் மொழியில் அவர் பாடிய பாடல்கள் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், அவை ஒவ்வொன்றும் முத்திரை பதித்தவை. குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் அவர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் உள்ளன.
இளையராஜாவின் இசையில் உருவான செண்பகமே செண்பகமே பாடலை தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாது. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ஆஷா போஸ்லேயின் தமிழ் உச்சரிப்பு மற்றும் மெல்லிய குரல் இனிமைக்கு ஒரு சிறந்த உதாரணம். கிராமிய மெட்டும் மேற்கத்திய பாணியும் கலந்த இந்தப் பாடலில் அவர் காட்டியிருக்கும் உணர்ச்சிகள் அபாரம்.
புதுப்பாட்டு என்ற ராமராஜன் படத்தில் இடம் பெற்ற எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிற பாடலை மறக்க முடியாது. இளையராஜாவுடன் இணைந்து ரொம்ப அழகாகப் பாடியிருப்பார் ஆஷா போஸ்லே. மீரா படத்திலும் ஆஷாவை வைத்து அழகான இரு பாடல்களை இழைத்திருப்பார் ராஜா.
மெலடி ராணியாக வலம் வந்து கொண்டிருந்த ஆஷா போஸ்லேவை, சேதுபதி ஐபிஎஸ் படத்தில் இடம் பெற்ற சாத்து நட சாத்து பாடல் மூலம் ஹஸ்கி ராணியாக மாற்றி மாஜிக் செய்தவர் ராஜா.
ஹேராம் படத்தில் இடம் பெற்ற நீ பார்த்த பார்வை இன்னொரு அட்டகாசமான பாடல். கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல் ஒரு காலத்தால் அழியாத காவியம். ஆஷா போஸ்லேயும் ஹரிஹரனும் இணைந்து பாடிய இந்தப் பாடல், மிகவும் நுணுக்கமான உணர்வுகளைக் கொண்டது.
பின்னர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இருவர், அலைபாயுதே ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் போஸ்லே.
தேவா இசையிலும் போஸ்லேவின் தேன் குரல் ஒலித்துள்ளது. நேருக்கு நேர் படத்தில் இடம் பெற்ற எங்கெங்கே பாடலை மறக்க முடியுமா.. அந்தப் பாடல் மொத்தமும் அட்டகாசமான யூத் பேக்கேஜ். இசை, குரல்கள், கலைஞர்கள், காட்சியமைப்பு என மொத்தப் பாடலும் சூப்பர் ஹிட்டானது.
பிறமொழிப் பாடகராக இருந்தாலும், தமிழில் வார்த்தைகளை மிகத் தெளிவாகவும் அழகாகவும் உச்சரிப்பதில் அவர் காட்டிய அக்கறை பாராட்டுக்குரியது. ஆஷா போஸ்லே பாடிய பெரும்பாலான தமிழ் ஹிட் பாடல்கள் இளையராஜாவின் இசையமைப்பிலேயே அமைந்தன. இவர்களின் கூட்டணி இசை ரீதியாகப் பல புதுமைகளையும் செய்தது.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருதுகளைப் பெற்ற ஆஷா போஸ்லே, தமிழ் திரையிசையிலும் தனது குரலால் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
ஆஷா போஸ்லேவின் மறைவு இந்தித் திரையுலகுக்கு மட்டுமல்ல, இந்தியத் திரை இசை உலகுக்கும் பெரிய இழப்புதான்.