ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
டெல்லி: ஆசியா கோப்பை 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகவுள்ளது. எல்லாம் சரியாக இருந்தால், 21 நாட்களில் பாகிஸ்தானுடன் நமது அணி 3 முறை மோதும் வாய்ப்புள்ளது.
ஆசியா கோப்பைத் தொடர் நடைபெறுமா என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தது. ஏனென்றால், பாகிஸ்தான் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததும் இரு நாடுகளுக்கு இடையே உறவை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. இதனால் இந்தியா ஆசியா கோப்பையில் பங்கேற்காது என்று செய்திகள் வந்தன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில்தான் இப்போட்டியை நடத்துகிறது. இதன் தலைவராக தற்போது பாகிஸ்தான் உள்ளது. இந்த நிலையில்தான் போட்டிக்கான அட்டவணை வெளியாகவுள்ளது. அதன்படி, ஆசியா கோப்பை 2025 செப்டம்பர் 5 (வெள்ளிக்கிழமை) தொடங்க வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கலாம். இந்த போட்டி T20 வடிவில் நடக்கும். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்தது போலவே, இந்த முறையும் லீக் மற்றும் சூப்பர் ஃபோர் முறையில் நடக்கும். பாகிஸ்தானும், இந்தியாவும் சூப்பர் ஃபோருக்கு தகுதி பெற்றால், செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரண்டாவது முறை மோத வாய்ப்புள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 21 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் மற்றவர் நாட்டில் விளையாடுவதில்லை என்பதால், ஆசியா கோப்பை 2025 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடக்க வாய்ப்புள்ளது. ஆசியா கோப்பையில் இந்தியா பங்கேற்பது குறித்து BCCI விரைவில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) ஜூலை முதல் வாரத்தில் அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதுவரை எதுவும் உறுதியாகவில்லை. அடுத்த வாரம் ஒரு முடிவு எடுக்கப்படலாம். ஆசியா கோப்பை 2025 ஆறு அணிகள் பங்கேற்கும் T20 போட்டியாக இருக்கும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் UAE ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடும்.