தேர்வு ஒரு சுமையல்ல... வெற்றிக்கான படி.. ஸோ பயப்படாம படிங்க!
- க. பிரியா
கோயம்புத்தூர்: மாணவிகள் தேர்வினை ஒரு சுமையாகக் கருதாமல், தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகக் கருதி எதிர்கொள்வது அவசியம். தேர்வுக்குத் தயாராவதற்கும், பயமின்றி அதனை எதிர்கொள்ளவும் உதவும் சில முக்கியமான ஆலோசனைகள் இதோ....!
திட்டமிட்ட படிப்பு :
கால அட்டவணை: அனைத்துப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒரு முறையான கால அட்டவணையை உருவாக்குங்கள். கடினமான பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.
பாடத்திட்டத்தை அறிதல்:
தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை (Syllabus) முழுமையாகப் புரிந்துகொண்டு, எவற்றை முதலில் படிக்க வேண்டும் என்று வகைப்படுத்துங்கள்.
படிக்கும் முறை:
புரிந்து படித்தல்: பாடங்களை மனப்பாடம் செய்யாமல், அவற்றின் கருத்துக்களைப் புரிந்து படியுங்கள். இது நீண்ட காலத்திற்கு நினைவில் இருக்க உதவும்.
குறிப்புகள் எடுத்தல்: படிக்கும்போது முக்கியமான கருத்துக்களைச் சிறு குறிப்புகளாக எழுதி வையுங்கள். இது தேர்வுக்கு முந்தைய நாள் திருப்புதலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வினாக்களுக்கான விடைகள் ஒன்று போல் இருக்கும் போது அதனை ஒப்பிட்டு படித்தல் உதாரணமாக ஆண்டு, நூல், நூலாசிரியர் மற்றும் தலைவர்களின் பெயர்கள்
முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஓர் அலசல்: கடந்த கால வினாத்தாள்களைப் பயிற்சி செய்வது, வினாக்களின் தன்மையைப் புரிந்துகொள்ளவும் நேர மேலாண்மைக்கும் உதவும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம்:
சத்தாண உணவு: தேர்வு நேரத்தில் எளிதில் செரிமானமாகும் சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். அதிகப்படியான தண்ணீர் குடிப்பது உடலைச் சோர்வின்றி வைத்திருக்கும்.
போதுமான உறக்கம்: இரவு முழுவதும் கண் விழிப்பதைத் தவிர்த்து, குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் ஆழ்ந்து உறங்குங்கள். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும்.
சிறு இடைவெளிகள்: தொடர்ந்து பல மணிநேரம் படிக்காமல், ஒவ்வொரு ஒரு மணிநேரத்திற்கும் 5-10 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள்.
மன அழுத்தத்தைக் கையாளுதல்:
நேர்மறை எண்ணங்கள்: "என்னால் முடியும்", "நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன்" என்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒப்பீட்டைத் தவிர்க்கவும்: மற்ற மாணவிகளின் படிப்பு வேகத்தோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தேவையில்லாத பயத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.
தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டியவை
முன்கூட்டியே செல்லுதல் தேர்வு மையத்திற்குத் தேவையானவற்றை (பேனா, பென்சில் மற்றும் ஹால் டிக்கெட்) ஆகியவற்றுடன் 30 நிமிடங்கள் முன்னதாகவே செல்லுங்கள்.
வினாத்தாள் வாசித்தல்:
வினாத்தாளைப் பெற்றவுடன் பதற்றப்படாமல் 10 நிமிடங்கள் முழுமையாக வாசியுங்கள். தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளியுங்கள்.
நேர மேலாண்மை: ஒவ்வொரு வினாவிற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
குறிப்பு: தேர்வு என்பது உங்கள் வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே, அதுவே வாழ்க்கை அல்ல. உங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்துத் தேர்வைச் சந்தியுங்கள்.
(க.பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)