பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!

Su.tha Arivalagan
Feb 21, 2026,03:28 PM IST

- ஆ.வ. உமாதேவி


தாய்மொழி என்பது ஒரு குழந்தை தனது பிறப்பு முதல் தாயிடம் கற்கும் மொழியாகும். அது தனது குடும்பம் மற்றும் சூழலில் இருந்து இயல்பாக கற்கும் முதல் மொழியாகும். இது பெற்றோரிடமிருந்து கற்கப்பட்டு, தலை முறை தலைமுறையாக கடத்தப்படுவது ஆகும். இது ஒருவரின் சிந்தனை, அறிவு வளர்ச்சி மற்றும் உணர்வின் அடையாளமாக திகழ்கிறது. 


சிறுவயதில் பேச கற்கும் முதல் மொழி தாய் மொழியாகும். இது சரளமான மொழியாக ஒவ்வொருவருக்கும் அமையும். ஒருவரின் இனம், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தும் முக்கிய கருவியாக உள்ளது. தாய்மொழியில் கற்கும் கல்விதான் சிறந்த புரிதலையும், எண்ணங்களை வெளிப்படுத்தும் திறனையும் கொடுக்கும். 




தமிழின் சிறப்புகள்: 


தமிழை தாய்மொழியாக கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியமே! ஏனெனில் உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தமிழ் மொழிக்கு உண்டு. இது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி. உலகின் மூத்த செம்மொழிகளில் ஒன்றாகும். இதனுடைய தொன்மை, தனித்தன்மை, இலக்கண இலக்கிய வளம், இளமை தன்மை ஆகியவை தமிழின் சிறப்புகள் ஆகும். இந்தியாவின் முதல் மொழியாக அங்கீகரிக்கப்பட்ட பெருமை கொண்டது. இந்திய அரசால் உயர்தர செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது மற்ற மொழிகளின் துணை இன்றி தனித்து இயங்கும் கூடுதல் சிறப்பு உடையது. 


முத்தமிழ்: 


இயல், இசை, நாடகம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, இலக்கிய இசை மற்றும் நாடகக் கலைகளில் சிறந்து விளங்குகிறது. சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி. திருக்குறள், தொல்காப்பியம், அகம், புறம், சிலம்பு போன்ற உயர்தர இலக்கியங்களை கொண்டுள்ளது. 


தமிழ் உலகெங்கும் ஆட்சி செய்யும் மொழி. இலங்கை மற்றும் சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாகவும் கனடா போன்ற நாடுகளில் கலாச்சார அங்கீகாரமும் பெற்றுள்ளது நம் தாய்மொழி. 


நம் தாய் மொழியின் எழுத்துகள் தனித்துவமான வரி வடிவம், ஒலி வடிவம் மற்றும் இலக்கணம், உச்சரிப்பு ஆகியவற்றை கொண்ட திராவிட பண்பாட்டை பறைசாற்றும் மொழியாகும். 


உலக தாய்மொழி தினம்: 


தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பன்மொழிப் பண்பாட்டை ஊக்குவிக்கவும் மொழியியல் கலாச்சார பன்முகத் தன்மையை பாதுகாக்கவும் கொண்டாடப்படுகிறது. 1952 ல் வங்க மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் யுனெஸ்கோ அறிவிப்பால் கிபி 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இது கலாச்சார அடையாளத்தை காக்க வலியுறுத்துகிறது. 


ஒவ்வொருவருக்கும் தாய் எவ்வளவு முக்கியமோ அதை விட பல மடங்கு தாய் மொழியும், தாய்நாடும் முக்கியம். தாயை நேசிப்பவன் நிச்சயம் தாய் நாட்டையும் நேசிப்பான். 


தாய் மொழியை போற்றி பாதுகாக்கவும் அழியும் நிலையில் உள்ள மொழிகளை பாதுகாக்கவும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.


இன்று, தொடக்க நடுநிலைப் பள்ளிகள் விடுமுறை என்பதால், நேற்று தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உலக தாய்மொழி தினத்துக்கான உறுதி மொழியை எடுக்க நம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, நேற்று தொடக்க- நடுநிலைப் பள்ளிகளில் இளம் மாணவர்களுக்கு நெஞ்சில் பதியும் வண்ணம் தாய்மொழி குறித்த செய்திகளை வழங்கி உறுதிமொழியை எடுக்க வைத்தோம். 


ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி பற்று என்பது நிச்சயம் இருக்க வேண்டும். 


"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே"


என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க தாய் மொழியையும் சிந்தனையையும் இரண்டற கலந்து நம் பண்பாட்டிற்கு உயிரூட்டும் தூண்டுகோலாய் இருக்கும் தாய் மொழியை வளர்ப்போம். தாய் மொழியை மட்டுமின்றி தாய் நாட்டையும் நேசிப்போம். 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)