Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
சென்னை: ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் இளம் வயதில் அதாவது 19 வயதுக்கு முன்பாகவே அதிக முறை அரை சதம் அடித்த சாதனையாளர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆயுஷ் மாத்ரே இணைந்துள்ளார்.
18 வயது 261 நாட்களில் அவர் படைத்துள்ள இந்த சாதனை கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவர் இதுவரை 2 அரை சதங்களை விளாசியுள்ளார்.
ஏற்கனவே இந்த மைல்கல்லை எட்டிய வைபவ் சூர்யவன்ஷி (3 முறை) மற்றும் பிரித்வி ஷா (2 முறை) ஆகியோரின் வரிசையில் தற்போது மாத்ரேவும் 2 முறை அரைசதம் அடித்து இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்த சிஎஸ்கே நட்சத்திரம் இன்று படைத்துள்ளார்.
இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிக அதிரடியாக விளையாடிய மாத்ரே, அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினார். பின்னர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் மாற்று வீரராக 30 லட்சத்திற்கு ஒப்பந்தமான இவர், இன்று அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக உள்நாட்டுப் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் சாதனைகளை முறியடித்து, மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் (First-class, List A, T20) சதம் அடித்த மிக இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஆயுஷ் மாத்ரே.