சிவனே! போற்றி! போற்றி.. அழகிய சிங்கரின் என்பா
Aug 11, 2026,03:09 PM IST
- அழகிய சிங்கர்
(1)
பொன்னார் மேனியனை, மின்னார் செஞ்சடையானை,
மாதொரு பாகத்தானை,
மிளிர் கொன்றையானை,
பணிந்து பகர்வீர்;மனதில் இருத்தி!
சிவனே! போற்றி! போற்றி!
(2)
அடைக்கலம் காத்தானை அடி பணிவீர்!
ஆடலரசன் ஆட்டம்
காண்பீர்! மதுரையம்பதியில்;
அடைவார்க்கமுதனை, அமுதீசனை,
ஆவுடையானைத் தொழுவீர்!
சிவனே! போற்றி! போற்றி!
(3)
சோம சுந்தரக் கடவுளை நினையாமல்,
சோணாசலனை நித்தமும் நீ நினையாமல்,
வீணான நாட்களென வருந்தியே,சரணடை.
சிவனே! போற்றி! போற்றி!
(4)
முன்னைப் பழமைக்கும் பழையதான அவனே;
பின்னைப் புதுமைக்கும் புதிய வனும் அவனே!
ஆதி அந்தமில்லா அகண்டனை ; போற்றுக!
சிவனே! போற்றி! போற்றி!
(5)
சுந்தரனுக்கு நண்பனாய்,
அப்பருக்குத் தலைவனாய்
சம்பந்தனுக்கு தகப்பனாய்,
மாணிக்கவாசகனுக்கு சற்குருவாய்,
அனைத்துயிரிலும் உறையொரு இறைவனைப் போற்றுக!
சிவனே! போற்றி ! போற்றி!