வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. டாக்கா கோர்ட் அதிரடி

Su.tha Arivalagan
Nov 17, 2025,03:10 PM IST
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு டாக்கா கோர்ட் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஷேக் ஹசீனா, அவரது மூத்த சகாக்கள் மற்றும் பல அவாமி லீக் தலைவர்கள் கொலை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதில் முக்கியமானது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஜூலை எழுச்சியுன் தொடர்புடைய ஐந்து குற்றச்சாட்டுகள் மீதானதாகும். 

இதில், மாணவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, சித்திரவதை மற்றும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கொடிய ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்த உத்தரவிட்டது, மற்றும் ரங்க்பூர் மற்றும் டாக்காவில் நடந்த குறிப்பிட்ட கொலைகள் ஆகியவை அடங்கும். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்திருந்தார். 



ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை ஒடுக்குவதற்கு உத்தரவிட்ட குற்றத்திற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 78 வயதான ஹசீனா, கடந்த ஆகஸ்ட் 2024 இல் அவரை பதவியில் இருந்து அகற்றிய பெரும் போராட்டங்களை எதிர்கொண்டார். போராட்டங்கள் தீவிரமடைந்த அதே நாளில் ஹசீனா வங்கதேசத்தை விட்டு ஓடினார். அதன் பின்னர் இந்தியாவில் தஞ்சமடைந்து இங்கேயே வசித்து வருகிறார்.

வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) திங்கட்கிழமை, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் தனது தீர்ப்பை வழங்கியது. மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயம், ஹசீனாவின் இரண்டு உதவியாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கும் இதே குற்றச்சாட்டுகளின் கீழ் தீர்ப்பளித்தது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை "ஜூலை எழுச்சி" என்று அழைக்கப்பட்ட மாணவர் போராட்டங்களின் போது, ஹசீனா அரசாங்கம் நடத்திய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன..

1. வன்முறையைத் தூண்டுதல் மற்றும் மாணவர்களைக் கொன்றது: டாக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஹசீனா வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூலை எழுச்சியின் போது சுமார் 100 மாணவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2. மாணவர்களைத் தூக்கிலிட உத்தரவு: டாக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் மசூத் கமலுடன் தொலைபேசியில் பேசிய ஹசீனா, மாணவர்களைத் தூக்கிலிடுமாறும், "ராஜாக்களுக்கு தூக்கு தண்டனை கொடுங்கள்" என்றும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. 

3. துப்பாக்கிச் சூடு: போராட்டக்காரர்கள் "டாக்கா நோக்கி அணிவகுப்பு" அறிவித்தபோது, உள்துறை அமைச்சரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றார். அப்போது, காவல்துறையினர் ஆறு ஆயுதங்கள் இல்லாத போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொன்றனர். இந்த கொலைகள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குத் தெரிந்தே நடந்ததாகக் கூறப்படுகிறது.

4. சர்வதேச அளவில் தவறான தகவலைப் பரப்புதல்: பிரதமர் ஹசீனா, போராட்டக்காரர்களைக் கொல்ல ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த உரையாடல்கள் அடங்கிய ஒரு பென் டிரைவ் தீர்ப்பாயத்தில் இயக்கப்பட்டது. ஷேக் ஹசீனா மற்றும் ஹசன் உல் இனு இடையே நடந்த உரையாடலில், சர்வதேச முகமைகள் இதை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கூறியதாகவும், இந்த கருத்தை தொடர்ந்து பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாகவும் ஹசீனா கூறியதாகக் கூறப்படுகிறது.

5. மனித உரிமை மீறல்கள்: போராட்டக்காரர்களின் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூலை 16 அன்று அபு சயீத் கொல்லப்பட்டார். அமைதியான போராட்டங்கள் அடக்கப்பட்டன, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. டாக்காவை நோக்கிய அணிவகுப்பின் போது சட்டவிரோத கொலைகளும் நடந்தன.

இந்த வழக்கு, வங்கதேசத்தில் ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது. ஹசீனாவின் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்துப் போராடத் தயாராகி வருகின்றனர். இந்த தீர்ப்பு வங்கதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.