வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்
May 23, 2025,05:07 PM IST
டாக்கா : வங்கதேசத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இடைக்கால பிரதமராக பதவி வகித்து வரும் முகம்மது யூனுஸ் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், அரசியல் முட்டுக்கட்டை காரணமாக ஆட்சி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் பதவி விலக நினைக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தலைவர் நிஹித் இஸ்லாம் இதை தெரிவித்தார். அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் யூனுஸால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று அவர் கூறினார். யூனுஸ் பதவி விலகும் எண்ணத்தில் இருப்பதாக வெளியான செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.
அரசியல் கட்சிகள் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர முடியாவிட்டால் தன்னால் வேலை செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக யூனுஸ் உறுதியாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கேட்டுக்கொண்டார். அரசியல் கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நம்பிக்கை இல்லாத பட்சத்தில் யூனுஸ் பதவி விலகுவது நல்லது என்றும் இஸ்லாம் கருத்து தெரிவித்தார். கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தின் போது ராணுவம் முக்கிய பங்கு வகித்தது. அந்த ராணுவமே யூனுஸுக்கு சவாலாக இருந்தது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு யூனுஸ் ஆட்சிக்கு வந்தார். அப்போது ராணுவம் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஹசீனாவை விமானப்படை விமானத்தில் இந்தியாவுக்கு பாதுகாப்பாக அனுப்பியது. மாணவர்கள் பாகுபாட்டிற்கு எதிரான இயக்கம் (SAD) யூனுஸை பிரதமராக நியமிக்க கோரிக்கை வைத்தது. அந்த இயக்கத்தின் ஒரு பகுதியே இப்போது NCP ஆக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் யூனுஸின் ஆசியுடன் NCP உருவானது.