ஐபிஎல்லில் கோட்டை விட்டாலும்.. இந்தியா ஏ டீமில் ஸ்கோர் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
அதேபோல ஐபிஎல்லில் பட்டையைக் கிளப்பிய சாய் சுதர்ஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இந்தியா ஏ அணி 2 முதல் தர போட்டிகளில் விளையாடவுள்ளது. சென்டர்பரி மற்றும் நார்த்தாம்ப்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இந்தியா ஏ அணி மோதும். அத்தோடு இந்தியா ஏ மற்றும் இந்தியா சீனியர் அணியுடன் மோதும் ஒரு போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கடைசியாக நடைபெறும்.
இதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதீஷ் குமார் ரெட்டி, ஷர்துள் தாக்கூர், இஷான் கிஷான், மானவ் சுதர், தனுஷ் கோடியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருத்துராஜ் கெய்க்வாட், சர்பிராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் கம்போஜ், கலீல் அகமது, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கு. ஐபிஎல் தொடரில் கலீல் அகமது சிறப்பாக விளையாடி வந்தார். ருத்துராஜும் ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினார். ஆனால் காயம் காரணமாக பாதியிலேயே தொடரை விட்டு வெளியேறினார். கம்போஜும் சிறப்பான பெர்பார்மென்ஸை காட்டி வந்தார். ஆனால் ஐபிஎல் தொடரிலிருந்து தொடர் தோல்விகளால் சென்னை அணி வெளியேறி விட்டது. இருப்பினும் அந்த அணியின் 3 வீரர்களுக்கு இந்தியா ஏ அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா ஏ அணியின் சுற்றுப் பயண விவரம் |
போட்டி எண் | தொடங்கும் நாள் | முடியும் நாள் | இடம் |
1 | மே 30 | ஜூன் 2 | சென்டர்பரி |
2 | ஜூன் 6 | ஜூன் 9 | நார்த்தாம்ப்டன் |
3 | ஜூன் 13 | ஜூன் 16 | பெக்கன்ஹாம் |
இங்கிலாந்து தொடரின் 2வது போட்டிக்கு முன்பாக இந்திய அணியுடன் சுப்மன் கில், சாய் சுதர்ஷன் இணைவார்கள் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர்களும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த இருவரும் இந்தியா சீனியர் அணியின் இங்கிலாந்து தொடரிலும் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கேப்டன் பதவிக்கு சுப்மன் கில்லின் பெயர் அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்த ஜூனியர் அணியை அங்கு முதல் தரப் போட்டிகளில் விளையாட வைப்பது ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை, சீனியர் அணியில் இணைத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க வைக்கும் யோசனையில் பிசிசிஐ இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.