ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

Su.tha Arivalagan
Jul 17, 2026,05:20 PM IST

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா சரியாக ரன் குவிக்காததால், அவர் மீது பிசிசிஐ தேர்வுக் குழுவின் அழுத்தம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிசிசிஐ தரப்பு மறுத்துள்ளது.


2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் ரோஹித் சர்மா இல்லை என்றும், அவருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிக்க தேர்வுக் குழு விரும்புவதாகவும், இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியே ரோஹித்தின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில், கார்டிஃப் நகரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் இந்தச் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.




அவர் கூறுகையில், ரோஹித் சர்மா போன்ற ஒரு சீனியர் மற்றும் சிறந்த வீரருக்கு எந்தவித அழுத்தமும் இருக்க முடியாது. அவர் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் இத்தகைய அழுத்தங்களை உணர மாட்டார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் ரன் எடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இதனால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. 


லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தை நீங்கள் பார்க்கலாம். ரோஹித் சர்மா ரன் குவிக்க திணறுகிறார் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். சில நேரங்களில் ஆடுகளத்தின் தன்மை காரணமாக பேட்ஸ்மேன்களுக்கு சரியான மொமண்டம் கிடைக்காமல் போகலாம். 


சுப்மன் கில் மற்றும் விராட் கோலிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது, ஆனால் ரோஹித்திற்கு தகுந்த பந்துகள் கிடைக்கவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.


ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.