வங்கதேசத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடந்தால் புறக்கணிப்போம்.. பிசிசிஐ
டெல்லி: வங்கதேச தலைநகர் டாக்காவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அக்கூட்டத்தையும், அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளையும் புறக்கணிப்போம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவுகளை துண்டித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியா போகாது, அதேபோல பாகிஸ்தான் அணி இந்தியா வராது. இந்தியாவின் முதன்மையான பிரீமியர் லீக்கான ஐபிஎல்லிலும் கூட பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படுவதில்லை. சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை நியூட்ரல் மைதானங்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வங்கதேசத்தையும், இந்திய கிரிக்கெட் வாரியம் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தற்போது பாகிஸ்தானின் மொஷின் நக்வி இருக்கிறார். அவர் கவுன்சில் கூட்டத்தை டாக்காவில் நடத்த முடிவெடுத்துள்ளார். ஆனால் இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டாக்காவில் கவுன்சில் கூட்டத்தை நடத்தக் கூடாது. நடத்தினால் பிசிசிஐ அதை புறக்கணிக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இதனால் 2025 ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ நிலைப்பாட்டுக்கு இலங்கை, ஆப்கானிஸ்தான், ஓமன் கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை டி20 போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் இந்த போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது வேறு நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளனர். 2023 ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளையும் இந்தியா வேறு நாட்டில் விளையாடியது. இறுதிப் போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.