BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!

Su.tha Arivalagan
Jul 28, 2025,08:33 PM IST

மும்பை: இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இந்திய அணி திரும்பிய பிறகு பெருமளவிலான மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


அதேசமயம், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பதவிக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லையாம். இருப்பினும் பந்து வீச்சு பயிற்சியாளர் மார்னி மோர்கல் பதவிக்கு ஆபத்து என்று தகவல்கள் கூறுகின்றன. இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சிறப்பாக பேட்டிங் செய்கிறது. அதேசமயம், பந்து வீச்சு அந்த அளவுக்கு இல்லாததால், நம்மால் வெற்றிகளை அதிக அளவில் பெற முடியாமல் தவித்து வருகிறோம்.


இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு பிசிசிஐ மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாம். அதன் பிறகு ஆசியா கோப்பைப் போட்டித் தொடருக்குப் பிறகு முடிவுகள் எடுக்கப்படுமாம். அணியில் பெருமளவில் மாற்றங்கள் இருந்தாலும் கூட கம்பீரை இப்போதைக்கு மாற்ற பிசிசிஐ விரும்பவில்லையாம். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் கூட  ஆசியாக் கோப்பை வரும் நேரத்தில் தலைமைப் பயிற்சியாளரை மாற்றுவது சரியாக இருக்காது என்று பிசிசிஐ கருதுகிறதாம்.




நான்காவது டெஸ்டில் அன்ஷுல் காம்போஜை விளையாட வைத்ததும், குல்தீப் யாதவை நீக்கியதும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த முடிவை பிசிசிஐயும் கூட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். இதனால் கம்பீர் மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.


இந்தியா தனது அடுத்த டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ளதால், பிசிசிஐ அதிரடி மாற்றங்களைச் செய்யும் என்று தெரிகிறது.