அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
சென்னை: தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் இன்று வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து தங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மாநிலத் தலைவர் சு. சசிக்குமார், மாநில பொதுச் செயலாளர் வெ. குமரேசன், மாநில பொருளாளர் வெ. ஜான்பால் ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள் இந்த சந்திப்பை மேற்கொண்டனர்.
கணினி கல்வி ஒவ்வொரு மாணவனின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் மற்றும் கணினி பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சார்ந்த 5 முக்கிய கோரிக்கைகள் இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தைத் தனிப் பாடமாகக் கொண்டு வர வேண்டும்.
கணினி அறிவியல் பாடத்திற்கு எனத் தனிப் பாடப்புத்தகங்களை அறிமுகம் செய்து, வாராந்திர கால அட்டவணையில் அதற்கெனத் தனிப் பாடவேளைகளை (Periods) ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கணினி பயிற்றுநர் பணியிடங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் முறையில் விடக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பி.எட் பட்டம் பெற்ற தகுதியான கணினி பட்டதாரிகளைக் கொண்டு அரசே நேரடியாக
இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மத்திய அரசின் 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha - ICT) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு துறைகளுக்கு மாற்றாமல், கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கணினி கல்விக்காக மட்டுமே முழுமையாகச் செலவிட வேண்டும்.
பி.எட் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர்களையும் BEO (வட்டாரக் கல்வி அலுவலர்), DEO (மாவட்டக் கல்வி அலுவலர்) போன்ற தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அமைச்சரிடம் சங்க நிர்வாகிகள் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இக்கோரிக்கைகள் குறித்துப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது மாநிலத் துணைத் தலைவர்கள் அ.ஆ. ஆரோக்கியசாமி, ஜெ. கவிதா, மாநிலத் துணைச் செயலாளர்கள் கோ. காளிதாஸ், வண்ணத் தமிழ் சூர்யா மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் வெ. ஜமுனா ராணி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அமைச்சர் கமலியுடன் சந்திப்பு
அதேபோல கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக திருப்பூரில் கால்நடை துறை அமைச்சர் S. கமலியையும் நேரில் சந்தித்து மனு நமது கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அவர்களின் கோரிக்கையை கணிவுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் கமலி அவர்களது கோரிக்கை குறித்து உரிய இடத்தில் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.