A letter to the Mother: தன்னலமற்ற தாயே.... தாய்க்கு ஒரு கடிதம்!

Su.tha Arivalagan
May 10, 2026,04:31 PM IST

- பா. பானுமதி


தன்னலமற்ற தாயே....


வணக்கம் உன் பெண் நலத்தில் உனக்கு பெரியதாய் அக்கறை இல்லை ஆம்


விட்டுக் கொடுத்தால் விழ்த்தி விடுவார்கள் என்றாய் 


புரிந்து கொள்ளாதே புண்படுத்துவார்கள் என்றாய் 


அரவணைக்காதே ஆட்டிப்படைப்பார்கள் என்றாய் 


பொறுத்துப்போகாதே பொசுக்கி விடுவார்கள் என்றாய் 


ஆதரவு காட்டாதே அடக்கி விடுவார்கள் என்றாய் 




வேலை செய்தால் விரட்டுவார்கள் என்றாய் 


சமைத்துப் பழகாதே சகலமும் உன் பொறுப்பில் விழும் என்றாய் 


என் வருமானத்தை என் விருப்பப்படி செலவு செய்ய சொன்னாய் 


மரியாதை கொடுத்தால் மண்டியிடச் செய்வார்கள் என்றாய் 


வீட்டை பராமரித்தால் வேலை பளு அதிகமாகும் என்றாய் 


ஓய்வெடுத்துக் கொள் உடம்பை தேற்றிக்கொள்கின்றாய் 


சுதந்திரமாக இரு என சொல்லிக் கொடுத்தாய் 


அதிக அக்கறை காட்டினால் அடிமைப்படுத்தி விடுவார்கள் என்றாய் 


எல்லாம் சரிதான் உன் சொல்படி நான் இருந்தேன் 


ஆனால் எதுவும் சுகப்படவில்லை 


உணர்ச்சி உள்ள ஒரு பொருளாக தான் நான் இருக்கிறேன் 


என்னுடன் யாரும் உரிமை பாராட்டுவதில்லை உறவு கொண்டாடுவதில்லை


புகுந்த வீடு எனக்கு அன்னிய வீடாக தான் இருக்கிறது 


தனி குடித்தனம்  சென்றாலும் தவிர்க்க முடியாத வேலைகள்


அணைக்கட்டில் அடைத்து வைக்கப்பட்ட நீரை போல் 


அமைதி மட்டுமே இருக்கிறது 

ஆனந்தமோ ஆர்ப்பாட்டமும் ஏதுமில்லை இது என்ன நூலகமா 


வீட்டில் இருக்கக்கூடிய எந்த ஒரு குதூகலம் கொண்டாட்டங்களும் காணப்படவில்லை


கணவன் கரிசனம் காட்டினாலும் அதில் ஏதேனும் காரியம் இருக்குமோ என்று தோன்றுகிறது


காரணம் நீ சொல்லிக் கொடுத்த இல்லற பாடங்கள் 


பணம் இருந்தும் மனமிருந்தும் மணமில்லை ஒரு எந்திர வாழ்க்கையே மிச்சமாய் இருக்கிறது


ஏன் இந்த நிலை எண்ணி எண்ணி பார்க்கிறேன் 


நீ மட்டும் நம்வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தாய் 


அப்பா உன்னை கொண்டாட தாத்தா பாட்டி துணை இருக்க


பிள்ளைகள் நாங்கள் உன்னோடு பிணைந்து இருக்க 


எனக்கு மட்டும் ஏன் இப்படி தனிக்காட்டில் தவிப்பது போல் 


எண்ணி எண்ணி பார்க்கிறேன் 


ஆம் தெரிந்து விட்டது பெண்ணாதிக்கம் ஊட்டி வளர்த்து விட்டாய் 


உனக்கு மாறாக என்னை நீ தயார் செய்தாய் வளர்த்தாய்


செல்லம் என்ற பெயரில் என் வாழ்க்கை சீர்க்கெட முடித்தாய் 


உன் தோழிகளுக்கெல்லாம் சொல்லிக் கொடு 


உன்னை போல் மட்டும் பெண்ணை வளர்க்க வேண்டாம் என்று 


விட்டுக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளுவதும் இல்லறத்தின் அடித்தளம் என்று


என்னையே நான் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் 


இப்படிக்கு


படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதித்து ஏதோ இழந்துவிட்டது போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உன் இனிய மகள்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)