மகா பாரத்தின் மிகப்பெரிய ஆளுமை.. "பீஷ்மர்"!
- ஆ.வ. உமாதேவி
மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரமான பீஷ்மர், சந்தன மகாராஜா மற்றும் கங்கை நதியின் மகன் ஆவார். இவர் இயற்பெயர் தேவவரதன் ஆகும். தந்தையின் விருப்பத்திற்காக பேராசை, திருமணம் மற்றும் அரியணையை துறந்து, இச்சா மரணம் (விருப்பப்படியே மரணம்) வரம் பெற்றவர். கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டு, அம்பு படுக்கையில் 58 நாட்கள் இருந்து உயிர் நீத்தவர்.
தந்தை சந்தனு, சத்தியவதியை மணப்பதற்காக, சந்தனவின் வம்சத்திற்கு மட்டுமே அரியணை சேர வேண்டும் என்பதற்காக, தன் உரிமையை துறந்து, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியம் காப்பதாக சபதம் செய்தார். இத்தகைய பீஷ்ம (கடுமையான) சபதத்தை மேற்கொண்டதால், தேவவிரதன் பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார்.
பரசுராமரிடம் வில்வித்தை வசிஷ்டரிடம் வேதங்கள் மற்றும் பிரகஸ்பதி இடம் அரசியல் கற்றார். குருசேத்திரப் போரில் கௌரவர்களின் தலைமை தளபதியாக போரிட்டார். பாண்டவர்களின் மீது அன்பு கொண்டாலும் சத்தியத்தின் காரணமாக, கௌரவர்களுக்காக போரிட்டார். அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்டு தரையில் விழாமல் அம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு உத்தராயன புண்ணிய காலம் வரும் வரை உயிர் துறக்காமல் காத்திருந்து, உத்திராயண வளர்பிறை அஷ்டமியில் உயிர் துறந்தார். அந்த நாளே" பீஷ்மா அஷ்டமி" ஆயிற்று. இந்த பீஷ்மா அஷ்டமி நாளில் ஒவ்வொருவரும் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபடுதல் மரபு.
பீஷ்மரின் உயிர் பிரிந்தபின், எல்லோரும் அழுதுவிட்டு சென்றுவிட, அறம் அறிந்த தருமன் மட்டும் கவலையோடு வியாசரிடம், திருமணம் ஆகாமல் இருந்ததால், அவருக்கு செய்ய வேண்டிய சிராத்தம் (ஆன்மா சாந்தி அடைய செய்யப்படும் இந்து மதச் சடங்கான பிண்டம், தர்ப்பணம், பிராமணர்களுக்கு தானங்கள் வழங்குதல்) செய்ய யாரும் இல்லையே எனச் சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு வியாசர், ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிகளுக்கும் துறவிகளுக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமில்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்கு போய்விடுகிறார்கள் என்று கூறினார்.
என்றாலும் உன் வருத்தத்துக்காக இனி இந்த பாரத தேசமே பீஷ்மருக்காக நீர் கடன், ரத சப்தமி நாளில் தங்கள் உடலில் எருக்கு இலைகளை வைத்துக்கொண்டு குளிக்கும் போது, தங்கள் பாவங்களை விடுவித்துக் கொள்வதோடு பீஷ்மருக்கும் நீர் கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்கு கிடைக்கும். அதே போல உத்திரான்ய வளர்பிறை (தை மாதம்) அஷ்டமியில் செய்யப்படும் தர்ப்பணம் பீஷ்மருக்கு செய்வதாகவே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தான், அந்நாளை பீஷ்ம தர்ப்பணம் என்பர் என்று வியாசர் தர்மனிடம் கூறினார்.
பீஷ்மா அஷ்டமி நாளில் பீஷ்மரை வணங்கினால், அவரைப் போலவே உயர்வான குணமுடைய நல்ல ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். அந்நாளில் அவரை வணங்கி முன்னோர் அனைவரின் அருளையும் பெறுவோமாக!
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)