Actually அவங்க நேஹா இல்லையாம்.. போபாலை அதிர வைத்த.. வங்கதேசத்து அப்துல் கலாம்!

Su.tha Arivalagan
Jul 20, 2025,11:21 AM IST

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில், ஒரு அதிர வைக்கும் சம்பவத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.


மிகப் பெரிய மோசடி வலையாக இது பார்க்கப்படுகிறது. சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் ஆள் மாறாட்டம் என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒரு நபரைப் பிடித்துள்ளது போலீஸ். பிடிபட்டவரின் பெயர் நேஹா.. ஆனால் விசாரணையில்தான் தெரிய வந்தது.. அவர் உண்மையில் பெண் இல்லை, மாறாக அப்துல் கலாம் என்ற பெயர் கொண்ட ஆண் என்று.


கடந்த 8 வருடமாக நேஹா என்ற பெயரில் இவர் போபாலில் வசித்து வந்துள்ளார். சட்டவிரோதமாக வங்கதேசத்திலிருந்து ஊடுறுவியவர் அப்துல் கலாம் என்றும் மத்தியப் பிரதேச போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். போலியான ஆவணங்களுடன் திருநங்கை போல வாழ்ந்து வந்துள்ளார் இந்த அப்துல் கலாம். இவரது பின்னணியில், சட்டவிரோதக் குடியேற்றக் கும்பல் இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.


அப்துல் கலாம், தனது 10 வயதில் இந்தியாவுக்குள் வந்துள்ளார். 20 வருடங்கள் மும்பையில் வாழ்ந்த பிறகு, போபாலின் புத்வாரா பகுதியில் குடியேறியுள்ளார். அங்கே தன்னை ஒரு திருநங்கையாகக் காட்டிக்கொண்டு, உள்ளூர் திருநங்கைகள் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் போன்ற முக்கியமான ஆவணங்களை, உள்ளூர் ஏஜெண்டுகள் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளார்.




காவல்துறையின் விசாரணையில், அப்துல் கலாம் ஒரு போலி அடையாளத்தில் வாழ்ந்ததுடன், போலி இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. போபால் புத்வாரா பகுதியில் பலமுறை வீடு மாறியுள்ளார். நேஹா என்ற பெயரில் அவர் அனைவருக்கும் பரிச்சயமானவராக இருந்துள்ளார். அவர் உண்மையில் திருநங்கையா அல்லது பிடிபடாமல் இருக்க இந்த அடையாளத்தைப் பயன்படுத்தினாரா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அப்துல் கலாம் போபாலில் மட்டுமல்லாமல், மகாராஷ்டிராவிலும் திருநங்கையாக வலம் வந்ததாக விசாரணையில் கிடைத்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது. அப்துல் கலாமின் பின்னணியில் மிகப் பெரிய அளவிலான மாறுவேடக் கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது. திருநங்கை வேடம் போட்டு பலரை இந்தியாவுக்குள் ஊடுறுவ வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் போலீஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.


அப்துல் கலாமுக்கு போலி அடையாள ஆவணங்கள் பெற உதவிய இரண்டு உள்ளூர் இளைஞர்களிடம் தற்போது விசாரணை நடக்கிறது. அப்துல் கலாமின் மொபைல் போன் அழைப்புகள் மற்றும் உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் தகவல்கள் திரட்டப்படுகின்றன.


அடையாள மோசடி மட்டுமல்லாமல், ஒரு வெளிநாட்டு நபர் எப்படிப் பல ஆண்டுகளாக ஒரு பெரிய இந்திய நகரத்தில் போலி ஆவணங்களுடன் கண்டுபிடிக்கப்படாமல் வாழ்ந்தார் என்பது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய கேள்விகளையும் எழுப்பியுள்ளது.