பீகார் சட்டசபைத் தேர்தல்.. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு.. வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் அட்வைஸ்!
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்களிக்கச் செல்வோர் அடையாள அட்டை இல்லாவிட்டால், என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதுதவிர பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியில் உள்ளது.
நாளை முதல் கட்ட வாக்குப்பதிவின்போது வாக்களிக்க உள்ளோர், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், தங்களது டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை (E-EPIC) பதிவிறக்கம் செய்யவும் முடியும். இதற்காக, தலைமை தேர்தல் அதிகாரி, பீகார் இணையதளத்திற்கு (ceoelection.bihar.gov.in) செல்ல வேண்டும். அங்குள்ள "Search in Roll" அல்லது "Elector’s Corner" பகுதியில் உங்கள் EPIC எண்ணை (Voter ID எண்) அல்லது உங்கள் பெயர், மாவட்டம், சட்டமன்ற தொகுதி போன்ற விவரங்களை உள்ளிட்டு தேடலாம்.
தேர்தல் நாளன்று வாக்களிக்கச் செல்லும்போது, அடையாளத்தை உறுதிப்படுத்த சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். வாக்காளர் அட்டை (EPIC) அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவை அடங்கும். இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்லலாம்.
அனல் பறக்க நடந்த முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.