பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Meenakshi
Feb 10, 2026,05:07 PM IST

சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. இருப்பினும் ஹாஃப்பாயில் சாப்பிடக்கூடாது. கோழி இறைச்சி  மற்றும் முட்டைகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உட்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.


இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பறவைக் காய்ச்சல் வைரஸ் வெப்பத்தில் அழிந்துவிடும் என்பதால், உணவைச் சரியாகச் சமைப்பது அவசியம் என்று குறிப்பிட்டார் முட்டைகளை அரைகுறையாக வேகவைத்து (Half Boil) உண்பதைத் தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை அதிக வெப்பநிலையில் (70°C-க்கு மேல்) முழுமையாக வேகவைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும். இறைச்சியைக் கையாளும் போது கைகளைச் சோப்பு போட்டுத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.




கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு வரப்படுவதைக் கண்காணிக்க எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் மற்றும் கால்நடைத் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


"பயப்படத் தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வு அவசியம். அரைகுறையாகச் சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்," என அமைச்சர் வலியுறுத்தினார்.