அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணி இறுதியாக உறுதி செய்யப்பட்டு, இன்று முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சென்னையில் தொடங்கின.
இ்தப் பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழுவும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவும் கலந்து கொண்டன. சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அறை எண் 504ல் இரு தரப்பு தலைவர்களும் கூடிப் பேசியுள்ளனர்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பிலிருந்தும் உயர்மட்டக் குழுக்கள் பங்கேற்றுள்ளன. அதிமுக குழுவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பாஜக குழுவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே தேர்தலைச் சந்திக்கும் என்றும், எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் ஏற்கனவே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று யாருக்கு எத்தனை சீட் என்ற நம்பரை முடிவு செய்யும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இவ்விரு கட்சிகளும், தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் தொகுதிகளைப் பிரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. பாஜக சுமார் 40 முதல் 50 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் தற்போது அதிமுக மற்றும் பாஜக என இரண்டே இரண்டு பெரிய கட்சிகள்தான் உள்ளன. பாமகவின் இரு பிரிவுகள், தேமுதிகவின் நிலை குறித்துத் தெரியவில்லை. இதுதவிர சில உதிரிக் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அவர்களுக்கு ஆளுக்கு ஒரு சீட் கொடுக்கப்படலாம். தமாகாவுக்கு சில தொகுதிகள் கிடைக்கலாம்.
பாமக, தமாகா உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களையும் ஒதுக்கிய பிறகு, அதிமுக - பாஜக இடையே இறுதிப் பட்டியல் தயாராகும் எனத் தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலை எல். முருகன் தலைமையில் பாஜக சந்தித்தது. நாடாளுமன்றத் தேர்தலை அண்ணாமலை தலைமையில் சந்தித்தது. வருகிற சட்டசபைத் தேர்தலை நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சந்திக்கவுள்ளது. இதில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வைத்திருந்தன. நாடாளுமன்றத் தேர்தலில் பிரிந்து போட்டியிட்டன. இப்போது மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களிலும் அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.