சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு புதிய சிக்கல்.. படத்திற்கு தடை கோரி பாஜக வழக்கு..!

Manjula Devi
May 12, 2025,09:03 PM IST

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றிருப்பதால், அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக வழக்குப்பதிவு செய்துள்ளது.


டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.  படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து, கஸ்தூரி, கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். ‌ இதில் சந்தானம் சினிமாக்களை விமர்சனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள இப்படத்தில்  காமெடிக்கு என்று சொல்லவா வேண்டும். அதனால் பாடல்களிலும் காமெடிகளை தெறிக்கவிட்டு பதிவேற்றம் செய்துள்ளனர். 




இந்த நிலையில் சந்தானம் நடிப்பில்  டிடி நெக்ஸ்ட் லெவல்  திரைப்படம் வரும் மே 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.  சமீபத்தில் இப்படத்தின் Kissa 47என்ற ஃபர்ஸ்ட் சிங்கள்  வெளியானது. இப்பாடல் நகைச்சுவை கலந்து  தயாராகியுள்ளது. குறிப்பாக இந்த பாடலில் கோவிந்தா கோவிந்தா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இது ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான வீவர்ஸ்களை பெற்றுள்ளது.


இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகள் கொண்டாடும் விதமாக உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின்  ரிலீசுக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், நடிகர் சந்தானம் மீது சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பாஜக தற்போது இப்படத்திற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு போட்டியாக, சூரி நடிப்பில் உருவான மாமன் திரைப்படமும், யோகி பாபு நாயகனாக நடித்த  ஜோரா கைய தட்டுங்க திரைப்படமும், மே 16ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.