பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர் தமிழக தலைவர்கள்
சென்னை: டெல்லியில் நாளை பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவசர அவசரமாக நாளை டெல்லி செல்கின்றனர்.
டெல்லியில் நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பதால், தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாளை டெல்லி செல்கின்றனர்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும், அதிமுக-பாஜக கூட்டணியில் இன்னும் உட்கட்சி பூசல் இருந்து வருவதாகவும், அதிமுக-பாஜக இடையே இருவேறுபட்ட கருத்து நிலவி வருவதாக பாஜக தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளது.
இது குறித்து விசாரிக்கவும், வரும் காலங்களில் உட்கட்சி பூசல் ஏதும் ஏற்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாஜக தமிழக முக்கிய தலைவர் நாளை டெல்லி செல்ல உள்ளனர்.