மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை திமுக இழந்து விட்டது. இனி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையப்போவது உறுதி என்று அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் பியூஸ் கோயல். பின்னர் அவர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி விருந்து அளித்துக் கெளரவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற காலை உணவு விருந்தில் பியூஷ் கோயல் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமி தனது நீண்டகால நண்பர் என்று குறிப்பிட்ட அவர், இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் நலனுக்காக தற்போதைய திமுக அரசு எதையும் செய்யவில்லை. இது ஊழல் நிறைந்த ஆட்சி. திமுக ஆட்சியில் இளைஞர்களும், பெண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் ஆதரவைத திமுக இழந்து விட்டது.
சனாதனத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்து, உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்தி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அது தமிழகத்திற்கு சிறந்த எதிர்காலத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் என்றார் அவர்.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக தலைவர்களும் உடன் இருந்தனர்.