தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Meenakshi
Nov 25, 2025,03:51 PM IST

சென்னை: தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது என்று அயோத்தில் பிரதமர் மோடி கொடியேற்றியதற்கு  நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இன்று உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் கோவிலின் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், பகவான் ஸ்ரீ ராமபிரான் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சூரியச்சின்னம் பொருந்திய தர்மக் கொடியை ஏற்றிய தருணங்கள், அனைத்து இந்துக்களையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டன.




எத்தனை போராட்டங்கள்? எத்தனை வலிகள்? எத்தனை கண்ணீர் துளிகள்? எத்தனை உயிர் பலிகள்? அத்தனைக்கும் இன்று பதில் கிடைத்து விட்டதாகவே தோன்றுகிறது. இந்துக்களின் பல நூற்றாண்டுகாலக் கனவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும், எத்தனை முறை வாழ்த்துகள் சொன்னாலும் போதாது.


இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்பதற்கேற்ப, 1990 ஆம் ஆண்டு ராம ரத யாத்திரையில் துவங்கிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இந்த வேள்விப் பயணம், இன்று பகவான் ஸ்ரீ ராமபிரான் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கான ஆலயத்தை எழுப்பி அதன்மீது தர்மக் கொடியேற்றும் வைபோகத்தில் வந்து நிற்கிறது. இப்பேற்பட்ட பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தெரிவித்துள்ளார்.