கருப்பே பேரழகு

Su.tha Arivalagan
Apr 07, 2026,02:39 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


பூவுலகம் தானியங்க பெருமழையைப் பொழிவதும் காரிருள் மேகம்‌‌ தான் !


தேனினும் இனிமையாய்க் கூவும் கானமும் கருங்குயிலின்‌ கீதம் தான் !


இனிப்பான வெல்லப்பாகை இதமாகத் தருவதும் கருப்பட்டி தான்!


சுண்ணக்கட்டியின்‌ திண்ணச் சொற்களால்

அறிவை வளர்க்க உதவும் 

ஆசானின் ஆயுதமும் 

கரும்பலகை தான்!


பகுத்துண்ணும் மாண்பை 

மானுடனுக்கு உணர்த்துவதும் கன்னங்கரிய காக்கை இனம் தான்!

நேர்மறை ஆற்றலை வளர்க்க நட வேண்டியதும் கருங்காலியைத் தான்!




இதயத்திற்கு பலம் சேர்க்கும் 

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 

கருப்புக் கவுனியில் தான்!


பெண்களுக்கு வலு சேர்க்கும் அற்புதமான உணவே

கருப்பு உளுந்து தான்!


ஆற்றல் மிகு அணு மின் நிலையத்திற்கு ஆதாரமும் கறுப்பு வைரம் தான்...!


அப்புறம் என்ன....


இரத்த சோகை நீக்கும் கருப்பு திராட்சை!


மனதை மயக்கும் சுவையைக் கொடுக்கும் காபிக்கொட்டை!


சிற்பங்களாகும் கருங்கல்!


எலும்பை இரும்பாக்கும் கருப்பு எள்!


மகரந்தச் சேர்க்கைக்கு கருவண்டும்....


மஞ்சத்தில் ஊஞ்சலாய் கருங்கூந்தலும்...


இன்னும் சொல்லிக்கொண்டே...செல்லலாம்  கருப்பின்‌ கைங்கர்யத்தை....


காதலோடு ரசிக்கும் கருவிழியும் ....


கருவிழியாள் 

தன் அழகைக் கூட்ட....


இட்ட கண்மையும் 

கருப்பே எனில்...


கருப்பே பேரழகு!

கருப்பே பேரழகு!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).